காஞ்சிபுரம் கச்சி ஆளவந்த வள்ளலார் செங்குந்தர் ஆதின மடம்.

0

செங்குந்த கைக்கோளர் சமூகத்தின் தொண்டை மண்டல                              கச்சி ஆளவந்த வள்ளலார் செங்குந்தர் தலைமை ஆதீன மடம்.

கல்வியிற் கரை யிலா காஞ்சி மாநகர்க்கு சிவாலய தரிசனம் செய்ய வந்த ஆளுடைப்பிள்ளை ஆகிய ஞானத்தின் திருவுருவம், நான்மறையின்
தனித்துணை யாம் சீர்காழி அருள்வள்ளல் திருஞானசம்பந்த நாயனார், தற்போது 
பிள்ளையார்பாளையம் என வழங்கப்பெறும் பகுதியில் சில காலம் தங்கி இருந்து
சமயப்பணி செய்து வருங்கால், அப்பகுதியின் செங்குந்தர் குலமக்களுட் பக்குவம்
வாய்ந்த அடியார்க்கு குருவாய் இருந்து சிவதீக்கை மற்றும் உபதேசம்
செய்வித்துத் தம் சிஷ்யப் பரம்பரை களுள் ஒன்றினை ஸ்தாபித்தார்கள்.
தீக்கை பெற்ற அவ்வடியார், திருஞானசம்பந்தப் பெருமானை குருமுதல்வராகக்
கொண்டு கச்சி ஆளவந்த வள்ளலார் ஆதினம் என்ற மடத்தினை நிறுவி தம்
குலத்தோன்றல்களின் வழியாக காலங்காலமாக சிவத்தொண்டும்
தமிழ்த்தொண்டும் புரிந்து வந்தனர்.

இவ்விதம் குருத்துவம் வாய்க்கப்பெற்ற அவ்வாதீன மரபினர், தம்
சந்ததியினருக்கும் பிற பக்குவர்களுக்கும் முறையாக சமய, விசேட, நிர்வாண
தீக்ஷைகள் செய்வித்து பின் ஆசாரியராகத் திருமுழுக்கும் செய்வித்து பீீடமேற்றி
கச்சி ஆளவந்தார் ஆதீன பாரம்பரியம் தொடர்ந்திட வழி செய்து வந்தனர்.

 
இவ்வாதீனத்தில் பீடம் அமர்ந்த ஆதீனர்களும், அவர்தம் குலத்துதித்த
ஏனையொரும் வடமொழி, தமிழ்மொழி என இருமொழிப் புலமை மிக்கவர்களாய்
இருந்து வந்தது பெரும் சிறப்பு ஆகும்.

 
பன்னெடுநாள் முன்தொடங்கி 2000 கள் வரை யிலும் கூட செங்குந்தர்
சமுதாயத்தினர், தமது இல்லத்தில் நிகழ்த்தும் சுப, அசுப நிகழ்வுகளை இவ்வாதீன
குருமார்களேயே குருவாகக் கொண்டு செய்து வந்தனர்.

நாம் அறிந்த வரையில் அம்மடத்தில் பின் வரும் செங்குந்த ஆதினகர்த்தர்கள்
இருந்திருப்பது தெரிய வருகிறது.

● சச்சிதானந்த தேசிகர்,
● கச்சாலை தேசிகர்,                        (இவர்கள் இருவரின் காலம் அறிய முடியவில்லை ) 

● முத்துக்குமாரசாமி தேசிகர் (1760-1820)
● கச்சபேசுர தேசிகர் (1800-1890)
● சதாசிவ தேசிகர் (1854-1908)
● சிவஸ்வாமி தேசிகர் (1896-1975)
● சிவ.சதாசிவ தேசிகர் (1933-2005


(தேசிகர் என்ற சொல்லுக்கு உபதேசிப்பவர்,அறிஞர், குரு என்று பொருள்)

கச்சி ஆளவந்த வள்ளலார் மடத்தலைவர்கள் அனைவரும் இல்லறத்தில் இருந்து
கொண்டே , தமிழ் மற்றும் வடமொழி அறிவுடன் சைவ ஆகமம் மற்றும் சைவ
சாத்திரங்களில் ஆழ்ந்த ஞானமும் புலமை யும் பெற்றிருந்தனர்.

 
இவ்வாதீனத்தின் வழி வந்த கச்சாலை தேசிகர் என்பவர் முதன்முதலில் காஞ்சிப்
புராணம் எழுதினார். கச்சாலை தேசிகர், கச்சாலை அகளங்கர் என்றும் பூரண
லட்சண கச்சாலை போதர் என்றும் அழைக்கப்பெறுகிறார். இவர் காழி வள்ளல்
சந்தானத்துச்சோமானன் என்பவரின் சீடராவார்.

இவர் இயற்றிய (பழைய) காஞ்சி புராணம் நூலின் தொடக்கத்தில் சுமார் 81
பக்கங்களில், தேசமெல்லாம் புகழ்ந்து பாராட்டும் காஞ்சிநகர்த்
திருத்தலங்களை ப்பற்றிய குறிப்புகள் எனும் தலைப்பில் சுமார் 84 தலங்கள் அகர வரிசையில் விளக்கி எழுதியுள்ளார்.

 
இவர் எழுதிய புராண ஏட்டுச் சுவடிகள் அச்சில் ஏறுமுன் தமிழ்த் தாத்தா
எனப்போற்றப்படும் உ.வே.சாமிநாதை யர் மூலமாக பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த
திரு. பொன்டெனு என்பாருக்கு அனுப்பி வை க்கப்பட்டு பின் சில காலம் கடந்து
தமிழகம் திரும்பி வந்தது. உ.வே.சா. அவர்கள் இப்புத்தகங்களைப் பதிப்பிக்கும் போது 'கடல் கடந்த புராணம்' எனப் பெயரிட்டுப் போற்றியுள்ளார்.

 
திருவாவடுதுறை ஆதீன மாதவச் சிவஞான சுவாமிகளால் இயற்றப்பட்டுள்ள
தற்போது கிடைக்கப்பெறும் காஞ்சிப் புராணம், கச்சாலை தேசிகர் இயற்றிய
காஞ்சி புராணம் (கடல் கடந்த புராணம்) எனும் நூலின் துணை கொண்டே
எழுதப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரிய ஒரு சிறப்புண்மை.

 
(தற்போது கச்சாலை தேசிகர் இயற்றிய பழைய காஞ்சி புராணமும், உ.வே .சா
பதிப்பகத்தால் பதிபிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்)

இவ்வாதீனத்து மரபில் உதித்த முத்துக்குமாரசாமி தேசிகர் (1760-1820), காஞ்சிப் புராணம் இயற்றிய மாதவச் சிவஞான சுவாமிகளின் சீடர் ஆவார். 

இவர் காஞ்சி கச்சபேசுரப் பெருமான் மீது 100 செய்யுள்கள் கொண்ட “கச்சபேசர் பாமாலை ” என்ற நூலை ப் பாடியுள்ளார்.

கும்பிடச் சென்றவர், கண்டவர்,கருதினர் என அனைவரின் தீது தீர்த்து, மாறிலா முத்திதரும் அருட்கடல் கச்சிக்கச்சபேசர் மேலே இயற்றப்பட்ட 

இப்பாமாலையில் உள்ள 100 பாடல்களும் "காஞ்சிக் கடவுளே கச்ச பாலையனே "
என்கிற தொடரால் முடிவு பெரும் வண்ணம் இயற்றி இருப்பார்.

 
தமிழ் மறை யாம் திருமுறையின் சுவை தினம் பருகும் அடியார்க்கு, தேவாரப்
பாடல் கிடைக்கப்பெறாத,எனினும் கீர்த்தி மிக்க திருத்தலமான கச்சபேசத்து
உறையும் இறைவர் மீது பாடப்பெற்றிருக்கும் இப்பாமாலை அக்குறையை நீங்கும் வண்ணம் இருப்பதாக காஞ்சிச் சிவனடியார்களும், ஆன்றோர்களும் போற்றி மகிழ்கின்றனர்.

இவ்வாதீனகர்த்தர்களில் பெரும் புகழ் பெற்றிருந்த, சதாசிவ தேசிகர்
(1854-1908),தனக்கு இறுதிக்காலம் வரை ஆண்மக்கட்பேறு வாய்க்கும் நிலை
இல்லாததால், குலமும் மரபும் அதன் புகழும் தொடர்ந்து செழிக்கும் வண்ணம்
காஞ்சிக்குக் கிழக்கே உள்ள கீழ்ப்படப்பையைச் சேர்ந்த தம் சொந்த மைத்துனர்.சிவஸ்வாமி தேசிகர் (1896-1975) (இவரும் படைப்பை என்கிற ஊரிலும், அதனைச் சூழ்ந்த பகுதிகளிலும் சைவமும் தமிழும் வளர்த்த, செங்குந்த குலகுரு மரபினைச் சேர்ந்த ஒரு தேசிகர் பரம்பரையில் வந்தவர் ஆவார்) என்பவரை தத்து எடுத்து தம் வாரிசாக வளர்த்தார்.

சிவசாமி தேசிகரும் திருமுறைகள்,சைவசித்தாந்த சாத்திரங்கள்,
புராணங்கள்,வடமொழி நூல்கள், ஆகமங்களில் பெரும்புலமை பெற்று
விளங்கியவர்கள் ஆவார்.
சைவ சித்தாந்த பெருமன்றம், வாணி விலாசம் ஆகியனவற்றை தோற்றுவித்த
பன்மொழி வித்தகர் ஆன திருப்பாதிரிப்புலியூர், திருக்கோவிலூர் மடத்தின்
ஐந்தாவது பீடாதிபதி ஆகிய ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய
சுவாமிகளின் (ஞானியார் சுவாமிகள்) விருப்பச் சீடராக இருந்து சைவ சமய
ஞானமும் பன்மொழியறிவும் பெற்றார்.

சிவசுவாமி தேசிகர் அவர்களுக்குத் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில் பகுதிகளில் சீடர்கள் பலர் இருந்தனர்.

சிவஸ்வாமி தேசிகரின் மூத்த மகன் சிவ. சதாசிவ தேசிகர் (1936-2005)ஞானியார்
சுவாமிகளால் அட்சராப்பியாசம் செய்து  வைக்கப் பெற்று பின்னாளில் தமிழ்,
வடமொழி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் புலமை கொண்டவர் ஆனார்.

சிவ.சதாசிவ தேசிகர் தம் குருபிரான் ஞானியார் சுவாமிகள் மீது கொண்ட
குருபக்தியாலும், பேரன்பினாலும் "சிவஞானியார் அடிப்பொடி" எனச்
சான்றோர்களாலும் அடியார்களாலும் போற்றப்பட்டவர் ஆவார்.

M.A.(Tamil), M.A.(English),M.Ed,DSM,DSS ஆகிய பட்டங்களைப் பெற்றவர். தம் குல
முன்னோர் பெருமை விளங்கும் வண்ணம் இவரும் சைவ சித்தாந்தத்தில்  ஆழ்ந்த அறிவு கொண்டவராகவும், சைவ சித்தாந்தம் குறித்து
வடமொழி மற்றும் தமிழ்மொழி என இரண்டிலும் பல விளக்கக் கட்டுரைகள், ஆராய்ச்சி கட்டுரைகள் வரையும் நுண்புலமும் பெற்றிருந்தார்.  

இவர் முதலில் சில காலம் திருக்கோவில் செயல் அலுவலர் ஆக இந்து சமய
அறநிலையத் துறையில் பணி புரிந்து பின் தமிழ்நாடு அரசின் கல்வித்துறை யில் ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகப் பணியாற்றினார்.இறுதியில் வடலூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றார்.  

பணி ஓய்வுக்குப் பின் திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதினத்தின்
நூலகர் மற்றும் சுவடிப்புலம் துறை க்குப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். 

திருவாவடுதுறை ஆதீன நூலகத்தில் பொறுப்பு வகித்தபபோது "திருமூலரின்
திருமந்திரம்" என்கிற நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். ஆதினம் வெளியிட்ட 50க்கும் மேற்பட்ட நூல்களில் வடமொழிப் பாகங்களை தமிழில் மொழி பெயர்த்து பெருந்தொண்டு செய்துள்ளார்.  

காஞ்சியில் பல காலம் சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்திய இவர்
"பன்மொழிப்புலவர், சிவஞானியார் அடிப்பொடி, சித்தாந்த வித்தகர், சிவாகம சிரோமணி" என சான்றோர்களால் பலவாறு பாராட்டப்பெற்றவர்.  

திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதினம் 23ஆவது குருமகா சன்னிதானம் அவர்களின் எண்ணப்படி, அவருக்கு அனுக்கராக இருந்து, அவரோடு
உடன் சென்று வடநாட்டுத் திருத்தலமான கேதார தரிசனம் கிடை க்கப்பெற்றார்.  

சிவ. சதாசிவ தேசிகர் அவர்கள் சிவபோகசாரம் மற்றும் சிவஞான போதச் செம்பொருள், ஆகிய நூல்களுக்கு தெளிவுரை எழுதியுள்ளார்.

கொடிக்கவி-சித்தாந்த விளக்கம் என்னும் நூலும் இயற்றி வெளியிட்டு இருக்கிறார். 

பெரும் புகழோடு விளங்கிய அன்னார்,10, ஆகஸ்டு 2005ல் சிவகதி அடைந்தார். 

செங்குந்த குலத்தின் பிரதான குரு பரம்பரை ஆகிய கச்சி ஆளவந்தார் மடத்தில்
இவருக்குப்பின் யாரும் குருமார்கள் ஆக திருமுழுக்கு செய்விக்கப்படவில்லை.









சிவ ஞான வள்ளலின் - வள்ளலார் சாஸ்திரம் நூலுக்கு - கச்சி ஆளவந்த வள்ளலார் ஆதீனம் கச்சபேஸ்வர தேசிகர் (1885) எழுதிய சிறப்பாயிரம்


தகவல் உதவி :                            சிவ.சதாசிவ தேசிகர் குடும்பத்தினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)