செங்குந்தர்‌ குல வடமலாமி பட்டயம்‌

0

 செங்குந்தர் குலகுரு கூனம்பட்டி ஆதீன மாணிக்கவாசகர்‌ திருமடத்தில்‌ இந்த ஓலைப்பட்டயம்‌ கிடைத்தது. 

 20.5.1654 இல்‌ எழுதப்பட்ட ஓலைப்பட்டயம்‌. கிருஷ்ணராஜ உடையார்‌ ஆட்சியில்‌ கோயமுத்தூர்‌ தலைவர்‌ தொட்டராச அய்யன்‌ அதிகாரம்‌ செய்யும்போது காஞ்சிபுரத்தைச்‌ சேர்ந்த செங்குந்தர்‌ நட்டுக்கட்டின நயினார்‌ என்பவர்‌ சத்தியமங்கலத்திற்கு வந்து கம்பம்‌ நாட்டினார்‌. அவர்‌ இடங்கையார்‌ ஆனதால்‌ வலங்கையார்‌ பலவந்தமாக அதனைப்‌ பிடுங்கிப்‌ போட்டார்கள்‌.

 சத்தியமங்கலம்‌ அதிகாரி நஞ்சராசையன்‌ அவர்கள்‌ கம்பத்துடன்‌ நட்டுக்‌ கட்டியை விசயமங்கலத்திற்கு அனுப்பினார்‌. விசயமங்கலத்திலும்‌ கம்பம்‌ நாட்டியபோது வலங்கையார்‌ கம்பத்தை வெட்டினார்கள்‌. அப்போது சமயமுதலி, பட்டக்காரர்‌, நாட்டாண்மைக்காரர்‌ மற்றுமுள்ள செங்குந்த முதலிமார்களும்‌ பின்னடைந்தார்கள்‌. 

நட்டுக்கட்டி ஒருவனாகவே எதிர்த்து நின்றான்‌. "சமூக வித்துவான்‌ நட்டுக்‌ கட்டியைத்‌ தனியாக விட்டு எல்லோரும்‌ ஏன்‌ போகிறீர்கள்‌" என்று கேட்க. செலவுக்குப்‌ பணம்‌ இல்லை என்று அவர்கள்‌ சொன்னார்கள்‌. கலியாண முதலி என்பவர்‌ செலவுக்குத்‌ தானே பணம்‌ அளிப்பதாகக்‌ கூறி எல்லோரையும்‌ விசயமங்கலத்திற்கு அழைத்துக்கொண்டு வந்தார்‌. உறவின்முறையாருக்கு (சமயமுதலி, பட்டக்காரர்‌, நாட்டாண்மைக்காரர்‌, பிற செங்குந்த முதலிமார்‌) 25 பொன்னும்‌, நட்டுக்கட்டிக்கு நாள்‌ ஒன்றுக்கு 5 பொன்னும்‌ ஆக நாளைக்கு 30 பொன்‌ வீதம்‌ 48 நாளைக்குச்‌ செலவு செய்தார்‌. 

 விசயமங்கலத்தில்‌ வலங்கையாரால்‌ வெட்டின கம்பத்தை ஈரோடு கொங்கலம்மன்‌ கோயிலுக்கு கொண்டுவந்து அங்குள்ள புளியமரத்தில்‌ கம்பத்தைக்‌ கட்டி நட்டுக்கட்டி, கலியாண முதலி உள்ளிட்ட அனைவரும்‌ கழுத்தில்‌ கத்தியை வைத்துக்கொண்டு படுத்திருந்தார்கள்‌. கலியாண முதலி படுகாயம்‌ அடைந்தார்‌. பின்‌ மரணமடைந்தார்‌. இதைக்கண்ட அதிகாரி நஞ்சராசையனவர்கள்‌ ஆதரவளித்து தைரியம்‌ சொல்லி கம்பத்தை நாட்டி கூத்துப்‌ பார்த்து, வேண்டிய மரியாதைகள்‌ செய்து பட்டணப்‌ பிரவேசம்‌ செய்து வைத்தார்‌. கலியாண முதலி சாதியின்‌ பொருட்டுப்‌ பெரும்‌ செலவு செய்து சரீரம்‌ குத்தி இறந்தான்‌ என்று அவர்‌ மகள்‌ வடமலாயிக்கு செங்குந்தர்கள்‌ எல்லோரும்‌ சமூக மரியாதை செய்தனர்‌.


ஆண்டுதோறும்‌ ஒரு சேலை, மக்கத்திற்குக்‌ கால்‌ பணம்‌, இரண்டு பூட்டு திருமணத்திற்கு பெண்‌, மாப்பிள்ளை வீட்டார்‌ ஒவ்வொருவரும்‌ ஒரு பணம்‌, ஐந்து பரிசாரகம்‌, ஊரழைப்பு, ஊர்‌ அனுப்பு, விடுதி முஸ்தேதி இந்தப்படி கொங்கு செங்குந்தர்‌ 24 நாடும்‌ நடக்கும்படி ஆணை பிறப்பித்தார்கள்‌. வடமலாயிக்கு பட்டயமும்‌ கொடுத்தார்கள்‌. விசயமங்கலத்தில்‌ திப்பு சுல்தான்‌ அலுவலர்‌ அந்தியூர்க்‌ கச்சேரி திவான்‌ கிரிமிரே சாயபு வலங்கை - இடங்கைத்‌ தகராறைத்‌ தீர்க்கும்‌ பொருட்டுப்‌ “பூர்வம்‌ தீர்ந்த பட்டயம்‌' பெற்றுக்கொண்டு சென்றதாகக்‌ கூறப்படுகிறது. அது இந்தப்‌ பட்டயமாகவே இருக்கலாம்‌.


செப்பேடு மூலம்‌

ஹரி ஓம்‌ நன்றாக குருவாழ்க குருவே துணை
வய்ய னீடுக மாமழை மன்னுக 
 மெய்வி ரும்பிய அன்பர்‌ விளங்குக 
 சைய்வ நன்னெறி தான்தழைத்‌ 
தோங்குக தெய்வ வெண்டிரு நீறு சிறக்கவே உ 
சிவமயம்‌ உ 

சொத்திஸ்ரீ மகாமண்டலிஎசுவரன்‌ அரியதழ விபாடன்‌, ஆரியமோகந்‌ தவிள்த்தான்‌, ஒட்டியதழ விபாடன்‌ ஒட்டியர்‌ மோகந்‌ தவிழ்த்தான்‌, ஆறிலொன்று கடமை கொண்டு அருள்‌ பெருகி அன்பு கூர்ந்து ஆதுர “சாலையும்‌, அந்தணர்‌ வேள்வியும்‌ வேதவொலியும்‌, விழாவறா வீதியும்‌ தபோதனர்‌ மடங்களும்‌, தர்ம சாலையும்‌ மிப்படி முப்பத்திரண்டறம்‌ விழங்கிய மண்டலந்‌ திரைகொண்டருழிய றாசாதிறாசன்‌, றாசர்‌ றாசர்‌ மண்டலந்‌ றாசமாற்தாண்டன்‌, அலுங்கிலும்‌ றாசகுலதீரன்‌, பரமேசுவரன்‌, றாசமனோபயங்கரன்‌, கடல்கலங்கிலுங்‌ காவேரி வற்றிலும்‌ மலை மனங்கலங்காத கண்டன்‌, றாசகெம்பீரன்‌, கன்டனாடு கொண்டு கொண்டனாடு குடாதான்‌. 

சொல்லுக்கு அரிச்சந்திரன்‌, அழகுக்கு அனங்கன்‌, அறிவுக்கு அகத்தியன்‌, அசுவபதி கெசபதி நரபதி தநபதி ஆகிய அரிக மல்லிகாற்சுனறாயர்‌ பிறபுடதேவறாயர்‌ மையிசூர்‌ ரத்தின சிங்காசனத்துக்கு உடயவறாகிய மகாறாச ஸ்ரீ கிற்ஷ்ணறாச உடையாற்‌ அய்யதவர்கள்‌ காரியத்துக்கு கற்தாவாகிய தழவாய்‌ வீரநஞ்சராச உடையாற்‌ பிற்திவி றாச்சியபாரஞ்‌ செயிகின்ற னாழையில்‌ 

கோயமுத்தூற்‌ குறித்தனம்‌ பாருபத்தியம்‌ சகலாதிகாரமுஞ்‌ செயிகின்ற தொட்டறாசஅய்யநவர்கள்‌ றாச்சியபாரஞ்‌ செயிகின்ற னாளையில்‌ சாலிவாகன கலியுக சகாப்தம்‌ 4655-க்கு மேல்‌ செல்லாநின்ற ஆனந்த வருஷம்‌ வைய்யாசி மாதம்‌ 23ந்‌ தேதி பஞ்சமியும்‌ ஸ்திரவாரமும்‌ பூச நட்செத்திரமும்‌ சுபனாம யோகமும்‌ பெற்ற யிந்த சுப தினத்தில்‌ காஞ்சிபுரம்‌ னட்டுக்கட்டியான நயினார்‌ சத்தியமங்கலத்துக்கு வந்து கம்பனாட்டினான்‌. வலங்கையார்‌ பிலவந்தமாய்ப்‌ பிடிங்கிப்‌ போட்டார்கள்‌. சத்தியமங்கலம்‌ குறித்தனம்‌ பாரபத்தியம்‌ நஞ்சராசய்யனவர்கள்‌ 

இவர்கள்‌ னாளையில்‌ சத்தியமங்கலத்துக்குக்‌ கட்டிய சனமும்‌ நட்டுக்கட்டு னயினாரைக்‌ கம்பம்‌ சயிதமாய்‌ விசயமங்கலத்துக்கு அனுப்பிவித்தார்கள்‌. விசையமங்கலத்துக்‌ கம்பம்‌ னாட்டினயிடத்தில்‌ வலங்கையார்‌ கம்பத்தை வெட்டினார்கள்‌. அதின்‌ பிறகு சமய முதலிப்‌ பட்டக்காறர்‌, நாட்டாண்மைக்காறர்‌ மற்றுமுள்ள செங்குந்த முதலிமார்‌ பின்னிட்டு போனார்கள்‌. நட்டுக்கட்டி ஒருத்தனாக நின்றான்‌. சாதி வித்துவானை தனியே விட்டுப்‌ போட்டு கூடிய நாடெல்லாம்‌ போகக்‌ காரியமென்னவென்று குறுக்காட்டிக்‌ கேட்டவிடத்தில்‌ சிலவு சித்தாயத்துக்கு யில்லாமல்ப்‌ போறோமென்று சொன்னார்கள்‌. கலியாண முதலி ஆகிறவன்‌ சிலவு சித்தாயத்துக்கு நானே தருகிறேனென்று எல்லோரையும்‌ விசையமங்கலத்துக்களைச்சுக்‌ கொண்டு வந்தான்‌. வந்ததின்‌ பிறகு கூடிய உறமுறைக்கு நாளொண்ணுக்கு இருபத்திஅஞ்சு பொன்‌ திருவேற்றினாகரம்‌, நட்டுகட்டிக்கு நாளொண்ணு அஞ்சு பொன்‌ ஆக முப்பது பொன்னும்‌ நாப்பத்தி எட்டு நாளைக்கும்‌ சிலவு செய்தான்‌. 

விசைமங்கலத்திலே வெட்டின கம்பத்தை ஈரோட்டுக்குக்‌ கொண்டு போய்‌ கொங்கிலாண்டம்மன்‌ கோவில்‌ புளிய மரத்திலே கம்பத்தைக்‌ கட்டி நட்டுக்கட்டியும்‌ கலியாண முதலியும்‌ இத்தண்டத்தாரும்‌ கம்பத்‌ தடியிலே மூணுனாள்‌ ஆறுபொழுது பிராணத்தை விட்டுவிடுகிறோமென்று படுத்திருந்தார்கள்‌. இந்தச்‌ சேதி குறித்தனம்‌ பாரபத்திய நஞ்சராசய்யனவர்கள்‌ கேட்டு இவர்களை அளைக்கவிட்டு இவுகள்‌ முன்னடந்த சேதி பாதிப்பெல்லாம்‌ கேட்டு அப்படியே ஆகட்டும்‌ ஒண்ணுக்கும்‌ யோசினை பண்ணாதேயளென்று தயிரியம்‌ சொல்லி மற்றாநாள்‌ கம்பத்தையும்‌ நாட்டிவிச்சு கூத்துப்பாத்து வேண்டியத்தக்க உடுகிறையும்‌ செய்து பட்டணப்‌ பிறவேசம்‌ பண்ணிவித்தார்கள்‌. அப்போது இருபத்துனாலு னாட்டுக்கும்‌ சமைய முதலிமார்‌ பட்டக்காரர்‌ நாட்டாண்மைக்காரர்‌ மற்றுமுள்ள செங்குந்த முதலிமார்கள்‌ எல்லோரும்‌ கூடி கலியாண முதலிக்கு சாதிக்குச்‌ சிலவளிவுஞ்‌ செய்து சரீரங்‌ குத்திப்பட்டானென்று நாடு இருபத்தினாளுங்கூடி கலியாண முதலி மகள்‌ வடமலாயிக்கு பட்டைய மெளுதிக்‌ குடுத்த விபரம்‌. 

வருஷம்‌ பிறிதியில்‌ நாடு ஒருவரிசை உடமையும்‌ 297 ஒரு சேலையும்‌ மக்கவரி வீட்டுக்கு கால்பணமும்‌ ரண்டு பூட்டு நூலும்‌ கலியாண வரித்தினை பெண்ணு வீடு ஒரு பணம்‌ மாப்பிள்ளை வீடு ஒரு பணம்‌ அஞ்சு பரிசாரகம்‌ ஊரளைப்பு ஊர்‌அனுப்பு விடுதி முஸ்த்தேதி இந்தப்படிக்கு நடந்து வாறபடிக்கு நாடு இருபத்தினாலும்‌ கூடி கலியாண முதலி மகள்‌ வடமலாயிக்கு செங்குந்த மாணிக்கியென்று பேரும்‌ குடுத்து பட்டயமுங்‌ குடுத்தோம்‌. இந்தத்‌ தர்மத்தை யாதாமொருத்தன்‌ விகாதம்‌ பண்ணினான்‌ கெங்கைக்‌ கரையிலே காராம்‌ பசுவைக்‌ கொண்ண தோஷத்திலே போவான்‌. இந்தத்‌ தர்மத்தை யாதாமொருத்தன்‌ பரிபாலனம்‌ பண்ணி வந்தவர்கள்‌ கறக்கும்‌ பாலுக்கும்‌ பிறக்கும்‌ பிள்ளைக்கு புத்திர பவுத்திரர்‌ உள்ளவரைக்கும்‌ காசி ராமேசுரத்தில்‌ விஷ்ட்ணு பிறதிட்டை சிவ பிறதிட்டை பண்ணின பலனை அனுபவிப்பார்கள்‌.   

 

Post a Comment

0Comments
Post a Comment (0)