சிதம்பரம் நாட்டாண்மை தில்லை ராஜ் நடராஜ முதலியார்

0

எல்லையில்லா ஆனந்தக் கூத்து நிகழ்த்தும் நடராசப் பெருமானின் திருத்தலமாம் சிதம்பரம் நகரில், பண்டைக்கால முதலே சிறப்புற்றோங்கிய, தொல்குடியாக செங்குந்தர் விளங்கிவருகின்றது. தில்லைப் பெருங் கோயிலில் மரபு பல அறக்கட்டளைகள் அமைத்தும் உற்வசங்கள் நிகழ்த்தியும் செங்குந்த மரபினர் ஆன்மீக நெறியை பேணிக்காத்து வருகின்றனர்.



பழங்காலந்தொட்டு நெசவுத் தொழிலில், சிறப்புற்றோங்கி வாழும் செங்குந்தர் மரபின் நாட்டாண்மைத் தலைமையேற்றுவரும் புகழ்வாய்ந்த குடும்பம், பகவான் முதலியார் குடும்பம். பகவான் முதலியார் தெரு என்று அவர்தம் பெயரால் வழங்கப்பெற்ற தெரு இன்று சுருங்கி, பாவாமுதலியார் தெரு என வழங்கப் பெறுகின்றது. பகவான் முதலியார் வழித்தோன்றல்கள் ஜவுளி வணிகத்தில் சிறந்து விளங்கினர், அவர்களில் குமாரசாமி முதலியாரின் மைந்தராகிய தில்லை கோவிந்தன், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தெற்குத் தெரு செங்குந்த மரபினரின் நாட்டாண்மைத் தலைவராக விளங்கி வந்தார்கள்.


சிதம்பரம் P.T.K. தில்லை கோவிந்தன் மற்றும் திருமதி C.T. வசந்தா தம்பதியரின் தவப்பயனாய் 25-10-1948 இல் செங்குந்தர் குலம் விளங்கப் புகழொடு தோன்றியவர் தில்லை ராஜ் நடராஜன்.


இளமையிலேயே கல்வி கேள்விகளிலும், ஆன்மீக எண்ணங்களிலும், நாட்டம் மிகவுடையாராக இவர் இருந்தார். தண்ணார் தமிழ் வளர்க்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மின்னியல் துறையில் பயின்று, 1970 இல் இளங்கலைப் பொறியாளர் பட்டத்தினைப் பெற்றார்.


இளங்கலைப் பொறியாளர் பட்டப்படிப்பில் இவர் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். பின்னர் அமெரிக்காவில் KANSAS STATE UNIVERSITY என்ற புகழ் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் M.S., பட்டமேற்படிப்பு படித்தார். மேலும் அப்பல்கலைக் முனைவர் பட்டமும் பெற்றார். தில்லை ராஜ் நடராஜன் அவர்கள் சார்ந்த அம்மையாரை 1976 ஆம் ஆண்டில் நன்மணம் புரிந்து கொண்டார். இத்தம்பதியர்க்கு இறையருளால் கார்த்திக், தேவி என்ற இரு நன்மக்கள் பிறந்தனர். இவர்தம் திருமகனார் கார்த்திக் கணிப்பொறி அறிவியலில் B.S.. பட்டப்படிப்பு படித்துள்ளார். மகள் தேவி B.S., மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார்.


நிருத்திய கலாநிதி பரதக்கலையை முறையாகக் கற்று, செல்வி. தேவி அமெரிக்க நாட்டில் டெக்ஸாஸ் ரிச்சர்ட்சன் என்ற இடத்தில், 30.08.03 ஆம் நாளில் அரங்கேற்றம் செய்தார்கள். அந்நிய பூமியில் வாழ்ந்தாலும் பாரம்பரியம் மிக்க பரதநாட்டியக் கலையில் செல்வி. தேவி நடராஜன் சிறப்புற்றோங்கி இருந்தார். அமெரிக்க மக்கள் இவரை “நிருத்திய கலாநிதி” எனப் புகழ்ந்தனர். 


தொழில் முனைவோர். LÅ Å TEXUS INSTRUMENTS, ARCO Oil & Gas போன்ற நிறுவனங்களில் பணியாற்றி சாதனை புரிந்த தில்லை ராஜ் நடராஜன், கடந்த 15 ஆண்டுகளாக Forum Communications என்ற நிறுவனத்தைச் சுயமாகத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாகிய Audio Conference Bridge பல்வேறு இடங்களில் இருக்கும் பல நபர்கள் தொலைபேசி மூலம் கருத்துப் பரிமாற்றம் (Conference Call) செய்து கொள்ளப் பெரிதும் உதவியாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களிலும், வெள்ளை மாளிகையிலும், அரசு நிறுவனங்களிலும், இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைகளிலும் இஃது பயன்படுத்தப் பெறுகின்றது.


புதிய கணித முறை 1973 இல் தில்லை ராஜ் நடராஜன் அவர்கள் அமெரிக்காவில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது இவரும் இவர்தம் பேராசிரியரும் கணித முறை ஒன்றைக் கண்டு பிடித்தனர். அதற்கு DCT கணித முறை என்று பெயர். இந்த DCT கணித முறையின் அடிப்படையில்தான் டிஜிட்டல் டெலிவிஷன் D.V.D.ஆகியன இன்று இயக்கப் பெற்று வருகின்றன. இச்சாதனை தலை நிமிரச் செய்யும் செயற்கரிய சாதனையாகும்.' 


பாபாவின் பக்தர் இவர் ஆன்மீக நெறியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். புட்டபர்த்தி சாய்பாபா அவர்களிடம் ஆழ்ந்த பக்தி பூண்டவர். சிதம்பரத்தில் சாய்பாபா கூட்டுவழிபாட்டு ஆலயத்திற்காகத் தம்முடைய வீட்டையே வழங்கி மகிழ்ந்த அருள் கொடையாளர் இவர். 


கொடியேற்றம் தில்லை நடராஜர் கோயிலில் நடைபெறும் ஆனிமாத மகோற்சவத்தின் போது, கொடியேற்றத் திருவிழா, செங்குந்தர் மரபினர்க்கு உரிமையுடையது. இதனை முன்னின்று நடத்துவதற்காக இவர் அமெரிக்காவிலிருந்து ஆண்டுதோறும் சிதம்பரத்திற்கு வருகைதருகிறார்கள். கம்பவிளக்கு கார்த்திகை தீப உற்சவத்தையும், கந்த சஷ்டி சூரசம்ஹர உற்சவத்தையும், சிறப்புறநிகழ்த்தி வருகின்றார்கள். இதற்காக அவரது தந்தையார் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார். 


குமரக்கோயில் கும்பாபிஷேகம் சிதம்பரம் கோயில் மேலைக் கோபுர வாசலில், சூரசம்ஹாரக் கோலத்தில், செந்தமிழ்க் குமரனாகிய கந்தக்கடவுளுக்கு என்று, சிதம்பரம் பெருமாள் தெரு தண்டபாணி முதலியார், திருக்கோயில் எழுப்பி குடமுழுக்கும் நிகழ்த்தினார். இத்திருக் கோயிலில்தான் செங்குந்த மரபினர் கந்தசஷ்டி உற்சவத்தை நிகழ்த்தி வருகின்றனர். இதற்கு 1998 ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. சிதம்பரம் தெற்குத் தெரு, செங்குந்தர் நாட்டாண்மைத் தலைவரான தில்லை. ராஜ் நடராஜன் அவர்கள் தம்முடைய சொந்த செலவில் மிக விமரிசையாகத் திருக்குடமுழுக்கை நிகழ்த்தி மகிழ்ந்தார்கள். செங்குந்த மரபினர், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் சஷ்டி மகாசூரசம்ஹார உற்சவத்தை, ஆண்டுதோறும் நிகழ்த்தி வருகின்றனர். அப்பொழுது விரதமிருந்து, நவ வீரர்களாக வேடமணிந்து, தங்கக்கீரிடம் அணிந்து, ஊர்வலமாக வந்து, நடராஜர் கோயிலில், கந்த கோயிலுக்குள் பகல்தீவட்டி, விருதுகளுடன் மங்கல வாத்தியம் முழங்க

நடராஜர் சந்நிதியை அடைவர். இவ்வாறு விருது முழக்கங்களுடன் சபாநாயகர் திருக்கோயிலுக்குள் ஊர்வலமாக வரும் உரிமை நம் செங்குந்த மரபினருக்கு மட்டுமே உள்ள தனி உரிமையாகும். ஸ்ரீ நடராஜர் சந்நிதியில், முருகப் பெருமான் வேல்வாங்கும் நிகழ்வு நடை பெற்றவுடன், செங்குந்த நவ வீரர்களுக்கு தீக்ஷிதர்கள் பட்டுப் பரிவட்டம் கட்டி, திருநீறளிப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. இந்தப் புகழ் வாய்ந்த உற்சவத்தினை, தில்லை ராஜ் நடராஜன் அவர்கள் மிகச் சிரத்தையோடு நிகழ்த்தி வருகின்றார்கள். 


செல்லியம்மன் கோயில் 

2003 ஆம் ஆண்டில் சிதம்பரம் செங்குந்த மரபினருக்குப் பாத்தியப்பட்ட, அருள்மிகு செல்லியம்மன் கோயில் முன்மண்டபத் திருப்பணியை, மிகுந்த பொருட் செலவில் செம்மையுறச் செய்து, இவரது தந்தையார் P.T.K. தில்லை கோவிந்தன் அவர்களின் திருப்பெயரால் இன்று எழிலோடு காட்சியளிக்கின்றது. 


செங்குந்தர் வாழ்வும் கல்விப்பணியும் செங்குந்தர் ஏழைச் சிறுவர்களும் இளைஞர்களும் கவலையில்லாமல் தம் கல்வி முயற்சிகளில் ஈடுபடுவதற்காக இவர்கள் மிக்க பொருளை வைப்புத் தொகையாக வைத்து அதனை இயக்கும் பணியைச் சிதம்பரம் செங்குந்தர் இளைஞர் சங்கத்திற்கு தந்துள்ளார். தொண்டுமன்ற உறுப்பினராக விளங்கிவரும் தில்லை ராஜ் நடராஜன் அவர்கள், நாகவேடு கட்டட நிதிக்காக தொடக்க காலத்திலேயே நன்கொடை வழங்கியுள்ளார். தொண்டுமன்றத்தின் கல்வி உதவித்தொகைக்கான கல்விநிதியையும் அளித்துள்ளார்கள். இவர்களின் கல்விப்பணி பாராட்டுதற்குரியதாகும். 


செங்குந்தர் மாளிகை 

சென்னையில் செங்குந்த சங்கதலைவர் ஜெ. சுத்தானந்தன் முதலியார் அவர்களின் முயற்சியால் உருப்பெற்றுள்ள செங்குந்தர் மாளிகை கட்டட நிதியாகத் தில்லை ராஜ் நடராஜன் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்கள். சமுதாய முன்னேற்றத்தில் இவர்கள் கொண்டுள்ள அக்கறைக்கு இச்செயல் மிகச்சிறந்த சான்றாக விளங்குகின்றது. கொடைமனமும் அறிவார்ந்த பண்பும் சமுதாய அக்கறையும் ஆன்மீக ஈடுபாடும் கொண்ட பெறற்கரிய செல்வமாகிய தில்லை ராஜ் நடராஜன் அவர்களும் அவர்தம் குடும்பமும் வாழையடி வாழையென ஓங்கிச் சிறந்து மேன்மேலும் பற்பல நற்பணிகளைச் செய்து வாழ்வாங்கு வாழ்வதற்குத் தில்லைச் சிற்றம்பலவாணனின் திருவடிகளை வணங்கி வாழ்த்துகிறோம்.






Post a Comment

0Comments
Post a Comment (0)