"தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே உண்டாலம்ம இவ்வுலகம்' என்ற சங்கப் பாட்டுக்குச் சாட்சியமாகி அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சமுதாயத் தொண்டாற்றிய ஆரணி புலவர் கோ.இளையபெருமாள் அவர்கள் தனது 87வது வயதில் 7.10.2007 அன்று இயற்கை எய்தினார். தமிழாசிரியராக தன் வாழ்க்கையைத் தொடங்கிப் புலவர்கோ-வாகத் திகழ்ந்த இளையபெருமாள் அவர்கள் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியபோது, சமுதாய உணர்வுமிக்கவராகி சமுதாயப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஆரம்பகாலத்தில் தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் பிரச்சாரகராக இருந்து ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டத்தில் கிராமம் கிராமமாகச் சென்று கிளைச் சங்கங்களை அமைத்து செங்குந்த மித்திரனுக்கு சந்தாக்களை சேர்த்து அனுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார். பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் சமுதாயத் தொண்டிலிருந்து ஓய்வு பெறாது ஓயாது முழு நேரமும் சமுதாயத் தொண்டில் ஈடுபட்டார். ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டத்தில் சுமார் ஆயிரம் மித்திரன் சந்தாதாரர்கள் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு புலவர் அவர்களின் பெரும் முயற்சியே காரணம். தலைமைச் சங்கத்தின் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பு உட்பட மாவட்ட, நகர அமைப்புகளின் பல பொறுப்புகளில் இருந்து ஆரணி, சைதாப்பேட்டையில் இருந்து சமுதாயத்திற்கு சொந்தக்கட்டடம், மாணவர்கள் கல்வியில் முன்னேற தனி வகுப்பு, ஊக்கப் பரிசு வழங்குதல் என்று சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்கா. மேலும் அவராற்றிய தமிழ்ப் பணி அளவிடற்கரியது. இரட்டைப் புலவர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலா என்னும் நூலைப் பதிப்பித்துள்ளார். குமரகிரி மும்மணிக் கோவை, காந்தியடிகள் குறள்நெறி வெண்பா, அறம் வளர்த்த நாயகி பாமாலை முதலிய கவிதைகளைப் படைத்த மரபு மாறாத கவிஞர். எளிய வாழ்க்கை வாழ்ந்த சிறந்த தொண்டரான புலவர் கோ.இளையபெருமாள் அவர்களின் மறைவு சமுதாயத்திற்கும், அவரது குடும்பத்தாருக்கும் பேரிழப்பாகும். அன்னாரது இறுதிச்சடங்கில் நமது சொந்தங்கள் மட்டுமின்றி பிற இனத்தவரும், சர்வகட்சியினரும் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். என்மீது மாறாத அன்புகொண்டிருந்த புலவர் ஒவ்வோராண்டும் தவறாது பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை அனுப்புவார். இந்த ஆண்டு வாழ்த்து கவிதைக்குப் பதிலாக அவருடைய மறைவுச் செய்தி வந்தபொழுது அதிர்ச்சியுற்றேன். முதிர்ந்த கனி உதிர்ந்ததென்றாலும் நான் அதிர்ந்து போனதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் உள்மூச்சு வாங்கும் வரையில் சமுதாயத்துக்காகவே சலியாது உழைத்தார். இவரது மறைவு பேரிழப்பு என்று கூறுவது என்னைப் பொருத்தவரையில் ஓர் சம்பிரதாயச் சொல் அல்ல. உள்ளத்தால், உரையால், உடலால், செங்குந்தரின மேன்மைக்கு உழைத்த அந்த உத்தமரின் மறைவு உண்மையில் பேரிழப்பே.